Tuesday, March 13, 2012

ராமாயணம் 301

என்னுடைய ராமாயணத்தில்
ப்ரஹலாதன் பிளந்தது
உன்னுடைய வயிற்றைத்தான்
வயிற்றுக்குள் இருந்து வெளியே விழுந்த
என்னைப் பார்த்து அதிர்ந்ததும்
நான் அல்ல நீயே தான்
இல்லாவிட்டால்
மந்திரத்தில் விளைந்த இக்கவிதையை
பிறகெப்படி நான் எழுதிக் கொண்டிருக்க முடியும்

வார்ப்பு
March 2012




Sunday, March 11, 2012

John Carter எனும் 3D மொக்கை

பெங்களூர் PVR Gold Classஇல் (ஒரு டிக்கெட் 750 ரூபாய், ஒரு coffee 75 ரூபாய்), ambiance நன்றாக இருக்கும் என்று, 'மனைவியோடு வருடத்திற்கொரு படம் தியெட்டரில்' qoutaவில், 2011இல் 2012இல் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று நெட்டில் ஒரு பக்கி எழுதியிருந்ததை மட்டும் படித்து, வேறெந்த reviewவும் படிக்காமல், வால்ட் டிஸ்னி தயாரிப்பு என்பதால் நம்பி, ரிலீசான முதல் வாரத்திலேயே போய் மாட்டிக்கொண்டேன்.

படம் ஆரம்பிப்பதற்கு முன் வரவிருக்கும் இன்னும் மூன்று படங்களுக்கு 3Dயிலேயே trailer காட்டுகிறார்கள். 3D கண்ணாடி அணிந்தால் வண்ணங்கள் தெளிவான வேறுபாடுகள் எல்லாம் இல்லாமல் ஒரு மாதிரி இருட்டாகத் தெரிகிறது. நிச்சயம் என் கண்ணில் எந்தக் கோளாரும் இல்லை.

இத்தனை படங்கள் பார்த்தும் கொஞ்சம் கூட புத்தியில்லாமல் இப்படியெல்லாம் நான் ஏன் சிக்கிக் கொள்கிறேனோ. இதைத் தமிழில் 'மார்ஸில் மொக்கைச்சாமி' என்று வெளியிட்டுத் தொலைப்பார்கள்.

கதை பற்றியெல்லாம் எதுவும் கேட்காதீர்கள். Edgar Rice Burroughsஇன் Barsoom தொடர் நாவல்களின் அடிப்படையில் வரும் முதல் நாவலான A Princess of Marsஐத் தழுவி உருவான கதையாம் ... கொடுமை. இன்னும் சில பாகங்கள் வரும் போல. சத்தியமாக இனிமேல் நான் பார்க்க மாட்டேன். குழந்தைகளோடு பார்க்க வேண்டிய படம் என்றெல்லாம் ஏமாந்து போக வேண்டாம்.



Tuesday, February 21, 2012

தூங்காவிரதம்

இடப் பக்கம் வௌவால்களும்
வடப் பக்கம் புறாக்களும்
நடுப் பக்கம் மனிதர்களும்
வாழ்ந்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பில்
அந்த இரவும்
அவன்
தனித்திருந்தான்
பசித்திருந்தான்
விழித்திருந்தான்
நோக்கம் இல்லையெனினும்
ஆற்றில் விழுந்ததால்
கடலில் கலந்தது
விடிந்ததும் வேண்டிக்கொண்டான்
ஆண்டவா காப்பாத்து
இந்த நாளை நீ பார்த்து
பழைய வேண்டுதல் தான் நிறைவேத்து

உயிரோசை
27-02-2012



Saturday, January 14, 2012

ஒரு கவிதை வார்த்தைகள்

1

தானியங்கி தாலாட்டு பாடும்
எந்திரத் தொட்டிலில்
மிதந்தபடி
கனவில் எழுதப்படும் கவிதையில்
இவன் வேண்டிக்கொள்கிறான்
விடாமல் தலைகோதும்
எந்திரக் கை வேண்டும் என

2

இரும்பு நூல் தறி ஓட்டம்
குதிக்கும் குதிரை வேகம்
எருமைத் தோல் வானம்
வெண்நாரை மேகம்
மழை பாடும் ஒப்பாரி ராகம்

3

தண்டவாள தாயக் கட்டைகள் உருள
ரயில்காய் நகர்வில்
வேறோர் உலகம்
விழுந்தது தாயம்
வாழ்வே மாயம்

உயிரோசை
27- 02-2012



Thursday, November 17, 2011

கடவுளாகித் திரியும் மனிதன்

பின்னே வெடித்தீயெரிய
முன்னே நடக்கும் நாயகனின்
அபத்த உலகிலிருந்து ஓர் அதிசயம் நிகழுமென
கடவுளாகித் திரியும் மனிதன்
ஹெல்மெட் கண்ணாடி மேல்
படர்ந்த மழைத்துளியில்
பதுங்கும் ஹெட்லைட்ஒளி
வெப்பம் சிதைத்த தார்வெளி
மறைக்க
ஏழு மேடு
ஏழு பள்ளம்
ஏழு சிவப்பொளி
    தாண்டி
அன்றைய வீடுபேறு அடைய
இரவின் மீது ஏறிச் சென்ற பயணம்
முடிகிறது
முற்றத்தில்
வெளிச்ச வெறி ஏறிய டைல்ஸ் தரை
வழிப் புலரும் காலை மீது
வெடிக்கிறது சூரியன்
மீண்டும்



Friday, November 11, 2011

நான் இப்பொழுது குடிக்கும் பியர்

உள்ளங்கையில் துள்ளும் கடல் மீது
ததும்பும் நார்சிசப் பிம்பம்
அந்த காலத்தில் பேய்கள் இருந்தன
என்றது
பேயோட்டிய பின்
போய் அமர்ந்த private beach கடற்கரை மணலில்
நட்ட பீர் பாட்டிலை
சைத்தானென்று
நாலு mug குடித்த பின்னும்
நான் இப்பொழுது குடிக்கும் பியர்
பிதுங்கும் கோப்பையில் விழுகிறது
கை நீட்டி உணர்ந்த மழை
ஊதித் தள்ளிய பியர் நுரை
கலக்கிறது கடல் நுரையுடன்
மழை மீது பெய்யும் மழை
கடல் மீதும் பெய்கிறது
என் மீதும் பெய்கிறது
கோபம் வீணடிக்கும்
அன்பின் வழி வந்த வெப்பம்
மேலே எழுந்தது
மஹாஜனங்களின் மீது
மழையாகிப் பொழிந்தது



Friday, October 28, 2011

கனவில் எழுதப்படும் கதை : ‘சவால் சிறுகதை - 2011’

1

அந்த ஃபோட்டோவைப் பார்த்ததுமே நான் ஆச்சரியப்பட்டேன்.

நேற்று என் கனவில் வந்த அந்த நிகழ்வு போலவே இருந்தது.

அவ்வளவு தத்ரூபமாகவா கிராஃபிக்ஸ் செய்திருப்பார்கள் ...

‘ஒரு செல்போனையும், மேஜையில் கிடக்கும் இரண்டு குறிப்புகள் பிரிண்ட் செய்யப்பட்ட துண்டுத்தாள்களையும் நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது என் ஃபோனில் விஷ்ணு - இன்ஃபார்மர் என்பவரிடமிருந்து ஒரு அழைப்பு வருகிறது.’

என் கனவில் அந்தக் குறிப்புகள் இவ்வளவு தெளிவாக இல்லை.

அனுப்பியவரின் மின்னஞ்சல் முகவரியை கவனித்தேன்.

எனக்கு பழக்கமில்லாத யாரோ.

Cc-இல் இருந்த மற்றொரு முகவரியும் புதிது.

Subject-இல் பார்த்தால் ‘இன்னுமா புரியவில்லை’, என்றிருந்தது.

Message-இல் ‘ஹலோ’ என்று மட்டும் இருந்தது.

Attachment-இல் இருந்த அந்த ஃபோட்டோவை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். புதிராகவே இருந்தது.

2

S.P.Gokul, Vishnu மற்றும் நான் மூவரும் அந்த அறையில் சந்தித்தோம்.

“கனவில் நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கதை முடிந்து நீங்கள் விழித்துக் கொள்ளத் தான் அந்த ஃபோட்டோவை உருவாக்கினோம்.”, என்றான் S.P.Gokul

“ஆனால் நீங்கள் இன்னும் எங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள்.”, என்றான் Vishnu.

“எந்த ஃபோட்டோ”, என்றேன் நான்.

“அதற்குள் மறந்துவிட்டீர்களா. இதோ ...”, என்றனர் இருவருமே.

அந்த ஃபோட்டோவைப் பார்த்ததுமே நான் ஆச்சரியப்பட்டேன்.

நேற்று என் கனவில் வந்த அந்த நிகழ்வு போலவே இருந்தது.

அவ்வளவு தத்ரூபமாகவா கிராஃபிக்ஸ் செய்திருப்பார்கள் ...

கதை விமர்சனம்

போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த கதை இது